ஆதியாகமம் 35:1-29

35  அதன்பின் யாக்கோபிடம் கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில்+ குடியிரு. உன் அண்ணன் ஏசாவிடமிருந்து நீ தப்பித்து ஓடியபோது+ உன் முன்னால் தோன்றிய உண்மைக் கடவுளுக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டு” என்றார்.  அப்போது, யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாரையும் தன்னோடு இருந்த எல்லாரையும் பார்த்து, “நீங்கள் வைத்திருக்கிற பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்.+ உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களுடைய துணிமணிகளை மாற்றிக்கொள்ளுங்கள்.  நாம் பெத்தேலுக்குப் புறப்பட்டுப் போகலாம். அங்கே நான் உண்மைக் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டப்போகிறேன். ஏனென்றால், வேதனையில் நான் செய்த வேண்டுதல்களை அவர் கேட்டார். நான் போன இடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தார்”+ என்றார்.  அப்போது, எல்லாரும் தங்களிடம் இருந்த பொய் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதுகளில் போட்டிருந்த தோடுகளையும் எடுத்து யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவர் அவற்றை சீகேமுக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ் புதைத்துவைத்தார்.*  அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது, அவர்களைச் சுற்றியிருந்த எல்லா ஊர்க்காரர்களின் மனதிலும் கடவுள் திகிலை உண்டாக்கினார். அதனால், அவர்கள் யாக்கோபின் மகன்களைத் துரத்திக்கொண்டு போகவில்லை.  கடைசியில், யாக்கோபும் அவருடன் இருந்த எல்லாரும் கானான் தேசத்திலுள்ள லஸ்+ என்ற பெத்தேலுக்கு வந்துசேர்ந்தார்கள்.  அங்கே அவர் ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இடத்துக்கு எல்-பெத்தேல்* என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அவர் தன்னுடைய அண்ணனிடமிருந்து தப்பித்து ஓடியபோது உண்மைக் கடவுள் அங்கேதான் அவர்முன் தோன்றினார்.+  பிற்பாடு, ரெபெக்காளுக்குத் தாதியாக இருந்த தெபொராள்+ இறந்துபோனாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த கருவாலி மரத்தின் கீழ் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். அதனால், அந்த இடத்துக்கு அவர் அலொன்-பாகத்* என்று பெயர் வைத்தார்.  பதான்-அராமிலிருந்து வந்துகொண்டிருந்த யாக்கோபின் முன்னால் கடவுள் மறுபடியும் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். 10  கடவுள் அவரிடம், “இப்போது உன்னுடைய பெயர் யாக்கோபு.+ ஆனால், இனிமேல் உன் பெயர் இஸ்ரவேல்” என்று சொன்னார். பின்பு, அவரை இஸ்ரவேல் என்று கூப்பிட ஆரம்பித்தார்.+ 11  அதோடு, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள்.+ நீ பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகு. உன்னிடமிருந்து நிறைய ஜனக்கூட்டங்கள் உருவாகும்,+ உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+ 12  ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுப்பதாகச் சொன்ன தேசத்தை நான் உனக்குக் கொடுப்பேன், உன்னுடைய சந்ததிக்கும் கொடுப்பேன்”+ என்றார். 13  அதன்பின் கடவுள், அவருடன் பேசிய இடத்தைவிட்டு மேலே போனார். 14  கடவுள் தன்னுடன் பேசிய இடத்தில் யாக்கோபு ஒரு நினைவுக்கல்லை நாட்டி, அதன்மேல் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றினார், எண்ணெயையும் ஊற்றினார்.+ 15  கடவுள் தன்னோடு பேசிய அந்த இடத்தை யாக்கோபு மறுபடியும் பெத்தேல்+ என்று அழைத்தார். 16  பின்பு, அவர்கள் பெத்தேலிலிருந்து புறப்பட்டார்கள். எப்பிராத்துக்குப் போய்ச் சேர இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தபோது, ராகேலுக்குப் பிரசவ வலி வந்தது. பிரசவம் மிகவும் கஷ்டமாக இருந்தது. 17  வலியில் அவள் துடித்துக்கொண்டிருந்தபோது மருத்துவச்சி அவளிடம், “பயப்படாதே, உனக்கு இந்தத் தடவையும் ஒரு மகன் பிறப்பான்”+ என்று சொன்னாள். 18  அவளுடைய (உயிர் ஊசலாடிக்கொண்டிருந்ததால்) உயிர் போகும் நேரத்தில், அவள் தன்னுடைய மகனுக்கு பெனொனி* என்று பெயர் வைத்தாள். அவனுடைய அப்பாவோ அவனுக்கு பென்யமீன்*+ என்று பெயர் வைத்தார். 19  ராகேல் இறந்துபோனாள். எப்பிராத்துக்கு, அதாவது பெத்லகேமுக்கு,+ போகும் வழியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். 20  அங்கே யாக்கோபு ஒரு பெரிய கல்லை நாட்டினார். இன்றுவரை அது ராகேலுடைய கல்லறைக்கு நினைவுக்கல்லாக இருக்கிறது. 21  அதன்பின், இஸ்ரவேல் அங்கிருந்து புறப்பட்டு ஏதேர் கோபுரத்துக்கு அப்பால் கூடாரம் போட்டுத் தங்கினார். 22  இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் குடியிருந்தபோது, அவருடைய மகன் ரூபன் ஒருநாள் அவருடைய மறுமனைவி பில்காளோடு உறவுகொண்டான். இதை இஸ்ரவேல் கேள்விப்பட்டார்.+ யாக்கோபுக்கு 12 மகன்கள். 23  லேயாள் பெற்ற மகன்கள்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்,+ அடுத்து சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன். 24  ராகேல் பெற்ற மகன்கள்: யோசேப்பு, பென்யமீன். 25  ராகேலின் வேலைக்காரி பில்காள் பெற்ற மகன்கள்: தாண், நப்தலி. 26  லேயாளின் வேலைக்காரி சில்பாள் பெற்ற மகன்கள்: காத், ஆசேர். பதான்-அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்கள்தான். 27  கடைசியில், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு இருந்த மம்ரே என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்.+ இது கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இருந்தது. முன்பு ஆபிரகாமும் ஈசாக்கும் எப்ரோனில்தான் அன்னியர்களாகக் குடியிருந்தார்கள்.+ 28  ஈசாக்கு 180 வருஷங்கள் வாழ்ந்தார்.+ 29  அவர் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்து, கடைசியில் இறந்துபோனார்.* அவருடைய மகன்களான ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மறைத்துவைத்தார்.”
அர்த்தம், “பெத்தேலின் கடவுள்.”
அர்த்தம், “அழுகையின் கருவாலி மரம்.”
அர்த்தம், “வலது கையின் மகன்.”
அர்த்தம், “என்னுடைய துக்கத்தின் மகன்.”
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா