நீதிமொழிகள் 14:1-35

14  ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டிக்காக்கிறாள்.+ஆனால், புத்தியில்லாத பெண் அதைக் குட்டிச்சுவராக்குகிறாள்.   நேர்மையாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறான்.ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் அவரை அவமதிக்கிறான்.   முட்டாளின் வாயிலிருந்து வரும் ஆணவப் பேச்சு பிரம்புபோல் இருக்கும்.ஆனால், ஞானமுள்ளவர்களின் உதடுகள் அவர்களைப் பாதுகாக்கும்.   மாடுகள் இல்லையென்றால் தொழுவம் சுத்தமாக இருக்கும்.ஆனால், காளையின் பலத்தால் அறுவடை அமோகமாக இருக்கும்.   உண்மையான சாட்சி பொய் பேச மாட்டான்.ஆனால், பொய் சாட்சி மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.+   கேலி செய்கிறவன் ஞானத்தை எவ்வளவுதான் தேடினாலும் கண்டுபிடிக்க மாட்டான்.ஆனால், புரிந்துகொள்ளும் திறன் உள்ளவனுக்கு அறிவு எளிதில் கிடைக்கும்.+   முட்டாளைவிட்டுத் தூர விலகு.ஏனென்றால், அவன் எதையும் அறிவோடு பேச மாட்டான்.+   சாமர்த்தியமாக நடக்கிறவன் தான் போகும் பாதையை ஞானத்தால் புரிந்துகொள்கிறான்.ஆனால், முட்டாள்கள் தங்களுடைய முட்டாள்தனத்தால் ஏமாந்துபோகிறார்கள்.*+   முட்டாள்கள் குற்றம் செய்துவிட்டுக் கவலையில்லாமல் சிரிக்கிறார்கள்.+ஆனால், நேர்மையானவர்கள் சமரசமாவதற்குத் தயாராக இருக்கிறார்கள். 10  இதயத்திலுள்ள வேதனை இதயத்துக்குத்தான் தெரியும்.அதன் சந்தோஷத்தை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. 11  பொல்லாதவர்களின் வீடு அழிந்துபோகும்.+ஆனால், நேர்மையானவர்களின் கூடாரம் செழிக்கும். 12  மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு.+ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.+ 13  ஒருவன் வெளியே சிரித்தாலும் உள்ளத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம்.ஒருவனுடைய சந்தோஷம் துக்கத்தில் போய் முடியலாம். 14  ஒருவனுடைய உள்ளம் தாறுமாறாகப் போகும்போது அதன் விளைவுகளை அவன் சந்திப்பான்.+ஆனால், நல்லவன் தன்னுடைய செயல்களுக்குத் தகுந்த பலனைப் பெறுவான்.+ 15  விவரம் தெரியாதவன்* யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான்.ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.+ 16  ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான். 17  சட்டென்று கோபப்படுகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.+ஆனால், எதையும் யோசித்து செய்கிறவன் வெறுக்கப்படுகிறான். 18  விவரம் தெரியாதவர்கள்* முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள்.ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவர்கள் அறிவு என்ற கிரீடத்தைச் சூடியிருப்பார்கள்.+ 19  நல்லவர்களுக்கு முன் கெட்டவர்கள் தலைவணங்க வேண்டியிருக்கும்.நீதிமான்களின் வாசலில் பொல்லாதவர்கள் தலைவணங்குவார்கள். 20  ஏழையை அக்கம்பக்கத்தார்கூட வெறுக்கிறார்கள்.+ஆனால், பணக்காரனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.+ 21  அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+ 22  சதித்திட்டம் போடுகிறவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள். ஆனால், நல்லது செய்யப் பாடுபடுகிறவர்களுக்கு மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் காட்டப்படும்.+ 23  எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.ஆனால், வெட்டிப் பேச்சு வறுமையைக் கொண்டுவரும்.+ 24  ஞானமுள்ளவர்களின் கிரீடம் அவர்களுடைய செல்வம்.ஆனால், முட்டாள்களின் முட்டாள்தனத்தால் விளைவது இன்னுமதிக முட்டாள்தனமே.+ 25  உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்.ஆனால், ஏமாற்றுக்காரன் மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறான். 26  யெகோவாமேல் இருக்கும் பயம் ஒருவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தரும்.+அது அவனுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாக இருக்கும்.+ 27  யெகோவாமேல் இருக்கும் பயம் வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது. 28  மக்கள்தொகை உயர்ந்தால் ராஜாவின் மகிமை கூடும்.+மக்கள்தொகை குறைந்தால் அவனுடைய ஆட்சி கவிழும். 29  பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான்.+ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.+ 30  அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்.*ஆனால், பொறாமை எலும்புருக்கி.+ 31  எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+ 32  பொல்லாதவன் தன்னுடைய அக்கிரமத்தாலேயே வீழ்ச்சி அடைவான்.ஆனால், நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே அடைக்கலம் காண்பான்.+ 33  புத்தி* உள்ளவரின் இதயத்தில் ஞானம் அமைதியாகக் குடியிருக்கும்.+ஆனால், முட்டாள் தனக்கு ஞானமாகத் தோன்றுவதையெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறான். 34  நீதி ஒரு தேசத்தின் மதிப்பை உயர்த்தும்.+ஆனால், பாவம் குடிமக்களின் மதிப்பைக் கெடுக்கும். 35  விவேகமாக நடக்கிற ஊழியன்மேல் ராஜா பிரியமாக இருக்கிறார்.+ஆனால், வெட்கக்கேடாக நடக்கிறவனைப் பார்த்து அவர் கோபத்தில் கொதிக்கிறார்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.”
வே.வா., “அனுபவம் இல்லாதவன்.”
வே.வா., “வெறித்தனமாக.”
வே.வா., “அனுபவம் இல்லாதவர்கள்.”
வே.வா., “உயிர்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா