லேவியராகமம் 27:1-34
27 பின்பு யெகோவா மோசேயிடம்,
2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு நபருக்கென்று நிர்ணயிக்கப்படும் தொகையை யெகோவாவுக்குச் செலுத்துவதாக யாராவது விசேஷமாய் நேர்ந்துகொண்டால்,+ அவரவருக்கு நிர்ணயிக்கப்படும் தொகை இதுதான்:
3 பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி, 20 வயதுமுதல் 60 வயதுவரையுள்ள ஒரு ஆணுக்கு 50 வெள்ளி சேக்கல்.
4 பெண்ணுக்கு 30 சேக்கல்.
5 ஐந்து வயதுமுதல் 20 வயதுவரையுள்ள ஆணுக்கு 20 சேக்கல், பெண்ணுக்கு 10 சேக்கல்.
6 ஒரு மாதம்முதல் ஐந்து வயதுவரையுள்ள ஆண்பிள்ளைக்கு ஐந்து வெள்ளி சேக்கல், பெண்பிள்ளைக்கு மூன்று வெள்ளி சேக்கல்.
7 60 அல்லது அதற்கு அதிகமான வயதுடைய ஒரு ஆணுக்கு 15 சேக்கல், பெண்ணுக்கு 10 சேக்கல்.
8 ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையைச் செலுத்த முடியாதளவுக்கு அவன் பரம ஏழையாக இருந்தால்,+ குருவானவரின் முன்னால் வந்து நிற்க வேண்டும். நேர்ந்துகொண்டவனின் பண வசதிக்குத் தகுந்தபடி+ குருவானவர் அந்தத் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
9 ஆனால், பலி செலுத்துவதற்கு ஏற்ற ஒரு மிருகத்தை யெகோவாவுக்குக் கொடுப்பதாக நேர்ந்துகொண்டால், அவன் யெகோவாவுக்கு எதைக் கொடுத்தாலும் அது பரிசுத்தமாக இருக்கும்.
10 அதற்குப் பதிலாக வேறொன்றை அவன் செலுத்தக் கூடாது. குறை உள்ளதற்குப் பதிலாக குறை இல்லாததையும், குறை இல்லாததற்குப் பதிலாக குறை உள்ளதையும் செலுத்தக் கூடாது. அப்படி ஒரு மிருகத்துக்குப் பதிலாக வேறொரு மிருகத்தை மாற்றிக் கொடுத்தால், இரண்டுமே கடவுளுக்குச் சொந்தமாகிவிடும்.
11 அது யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்குத் தகுதியில்லாத அசுத்தமான மிருகமாக+ இருந்தால், அந்த மிருகத்தை குருவானவருக்கு முன்னால் நிறுத்த வேண்டும்.
12 அந்த மிருகத்துக்கு எந்தளவு குறை இருக்கிறதென்று குருவானவர் பார்த்து, அதற்கு ஏற்றபடி அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் நிர்ணயிப்பதே அதன் மதிப்பாகும்.
13 ஒருவேளை அவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+
14 ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணிக்க நேர்ந்துகொண்டால், அது தரமானதா இல்லையா என்பதைக் குருவானவர் பார்த்து அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் அதற்கு நிர்ணயிக்கும் மதிப்புதான் அதன் விலையாக இருக்கும்.+
15 ஒருவேளை, அந்த வீட்டை அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்போது, அது அவனுக்குச் சொந்தமாகும்.
16 ஒருவன் தன்னுடைய வயலில் ஒரு பகுதியை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டால், அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்து அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதாவது, ஒரு ஹோமர் அளவு* பார்லி விதைக்கப்படுகிற வயலின் மதிப்பு 50 வெள்ளி சேக்கல்.
17 அவன் தன்னுடைய வயலை அர்ப்பணிப்பதாக விடுதலை* வருஷத்தில்+ நேர்ந்துகொண்டால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு மாறாது.
18 தன்னுடைய வயலை அர்ப்பணிப்பதாக விடுதலை வருஷத்துக்குப் பிறகு நேர்ந்துகொண்டால், அடுத்த விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களைக் குருவானவர் கணக்குப் போட்டு, அதற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறைக்க வேண்டும்.+
19 ஒருவேளை, அந்த வயலை நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்போது, அது அவனுக்குச் சொந்தமாகும்.
20 அந்த வயலை அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டவன் அதை மீட்காமல் வேறொருவனுக்கு விற்றால், அதன் பிறகு அதை மீட்கவே முடியாது.
21 விடுதலை வருஷத்தில் அது யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அது பரிசுத்தமானதாகவும் குருமார்களின் சொத்தாகவும் இருக்கும்.+
22 ஒருவன் யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்ட வயல் பரம்பரை வயலாக இல்லாமல் விலைக்கு வாங்கப்பட்டதாக இருந்தால்,+
23 விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களுக்கான தொகையை குருவானவர் கணக்குப் போட வேண்டும். அதே நாளில், அந்தத் தொகையை அவன் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும்.+ அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
24 அந்த வயலை அவன் யாரிடமிருந்து வாங்கினானோ அவனுக்கே விடுதலை வருஷத்தில் அது சொந்தமாகும்.+
25 ஒவ்வொன்றின் மதிப்பும் பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி மதிப்பிடப்பட வேண்டும். ஒரு சேக்கலின் மதிப்பு 20 கேரா.*
26 மிருகங்களின் முதல் குட்டிகளை அர்ப்பணிப்பதாக யாரும் நேர்ந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ அது மாடாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி, அது ஏற்கெனவே யெகோவாவுக்குச் சொந்தமானது.+
27 ஒருவேளை, அது அசுத்தமான மிருகங்களில் ஒன்றாக இருந்தால், அது மீட்கப்படலாம். நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுத்து அதை அவன் மீட்க வேண்டும்.+ அப்படி மீட்காவிட்டால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி குருவானவர் அதை விற்க வேண்டும்.
28 ஒருவன் தனக்குச் சொந்தமானதை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால் அதை விற்கவோ மீட்கவோ கூடாது, அது மனுஷனோ மிருகமோ வயலோ எதுவாக இருந்தாலும் சரி. அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.+
29 அழிவுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட எவனும் மீட்கப்படக் கூடாது.+ அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+
30 விளைச்சலில் பத்திலொரு பாகம்* யெகோவாவுக்குத்தான் சொந்தம்,+ அது வயலில் விளைகிற பயிர்களாக இருந்தாலும் சரி, மரங்களில் காய்க்கிற பழங்களாக இருந்தாலும் சரி. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
31 அவற்றில் எதையாவது மீட்டுக்கொள்ள ஒருவன் விரும்பினால் அதன் மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
32 மாடுகளிலும் ஆடுகளிலும் பத்தில் ஒன்றை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். மேய்ப்பன் தன்னுடைய மந்தையை எண்ணும்போது* ஒவ்வொரு பத்தாவது மிருகத்தையும் கடவுளுக்காக ஒதுக்கிவைக்க வேண்டும். பத்தாவது மிருகம் ஒவ்வொன்றும் பரிசுத்தமானது.
33 அது குறை உள்ளதா குறை இல்லாததா என்று அவன் பார்க்கக் கூடாது, அதை மாற்றவும் கூடாது. அப்படி மாற்றினால் இரண்டுமே கடவுளுக்குச் சொந்தமாகிவிடும்.+ அவற்றை மீட்க முடியாது’” என்றார்.
34 இஸ்ரவேலர்களுக்கு மோசே மூலம் சீனாய் மலையில் யெகோவா கொடுத்த கட்டளைகள் இவைதான்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ ஒரு ஹோமர் என்பது 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “யூபிலி.”
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ ஒரு கேராவின் எடை அரை கிராமுக்கும் சற்று அதிகமாகும். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “தசமபாகம்.”
^ மேய்ப்பர்கள் தொழுவத்துக்கு உள்ளே அல்லது வெளியே விலங்குகளை அனுப்பும்போது தங்கள் கோலுக்குக் கீழாக ஒவ்வொன்றாய் அனுப்பி அவற்றை எண்ணினார்கள்.