Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த கியூனிஃபார்ம் பலகையின் ஒரு ஓரத்தில் தத்னாய் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது

இதோ இன்னொரு அத்தாட்சி!

இதோ இன்னொரு அத்தாட்சி!

பைபிள் பதிவுகள் உண்மையென்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றனவா? 2014-ல், பைபிள் சம்பந்தமான தொல்பொருள் ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற பத்திரிகையில் இந்தக் கேள்வி கொடுக்கப்பட்டிருந்தது: “எபிரெய வேதாகமத்திலுள்ள எத்தனை பேர் உண்மையிலேயே வாழ்ந்தார்கள் என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கிறது?” “குறைந்தது 50 பேர்” என்று அதே கட்டுரை பதில் சொன்னது. இந்தப் பட்டியலில் தத்னாய் என்பவரின் பெயர் இல்லை. தத்னாய் என்பவர் யார்? இவரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு காலத்தில், எருசலேம் நகரம் பரந்து விரிந்த பெர்சிய சாம்ராஜ்யத்தின்கீழ் இருந்தது. யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கே இருந்த பகுதியை ‘ஆற்றுக்கு அப்பால்’ என்று பெர்சியர்கள் அழைத்தார்கள். அங்குதான் எருசலேம் நகரம் இருந்தது. பெர்சியர்கள் பாபிலோனை கைப்பற்றிய பிறகு, யூதர்களை விடுதலை செய்து எருசலேமுக்குத் திரும்பி போகவும் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டவும் அனுமதி கொடுத்தார்கள். (எஸ்றா 1:1-4) ஆனால், யூதர்களின் எதிரிகள் இந்தக் கட்டுமான வேலையைத் தடுக்க முயற்சி செய்தார்கள். யூதர்கள், பெர்சிய அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். அதற்கு, ஆலயம் கட்டும் வேலையைக் காரணம் காட்டினார்கள். (எஸ்றா 4:4-16) முதலாம் தரியு ஆட்சி செய்த காலத்தில் (கி.மு. 522-கி.மு. 486 வரை) ஆளுநராக இருந்த தத்னாய் இந்தப் பிரச்சினையை விசாரித்தார். இவரைத்தான் பைபிள், “ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர்” என்று சொல்கிறது.—எஸ்றா 5:3-7.

ஒரு குடும்பத்தைப் பற்றிய பதிவேடு நிறைய கியூனிஃபார்ம் பலகைகளில் இருக்கிறது. அதில் பலவற்றில் தத்னாய் என்பவரின் பெயரும் இருக்கிறது. இந்தக் குடும்பத்திலுள்ள ஒருவருக்கும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தத்னாயுக்கும் சம்பந்தம் இருப்பதாக ஒரு கியூனிஃபார்ம் பலகை காட்டுகிறது. அந்தப் பலகை ஒரு உறுதிமொழிக் கடன்பத்திரம். இந்தப் பத்திரம் முதலாம் தரியு ராஜா ஆட்சி செய்த 20-வது வருஷம், அதாவது கி.மு. 502-ல், எழுதப்பட்டது. இந்தக் கொடுக்கல் வாங்கலுக்குச் சாட்சியாக இருந்தது “ஆற்றுக்கு அப்பாலுள்ள ஆளுநரான தத்னு” என்பவரின் வேலைக்காரன் என்று அந்தப் பலகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தத்னு என்பவர்தான் பைபிளிலுள்ள எஸ்றா புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்னாய்.

கி.மு. 535-ல் மகா ராஜாவான கோரேசு அவருடைய சாம்ராஜ்யத்தை மாகாணங்களாக பிரித்தார். அதில் ஒரு மாகாணம், ‘பாபிலோன் மற்றும் ஆற்றுக்கு அப்பால்’ என்று அழைக்கப்பட்டது. இந்த மாகாணம் பிற்பாடு இரண்டாக பிரிந்தது, அதன் ஒரு பகுதி ‘ஆற்றுக்கு அப்பால்’ என்று மட்டும் அழைக்கப்பட்டது. சிலி-சிரியா, பெனிக்கே, சமாரியா, யூதா போன்ற நகரங்கள் இந்தப் பகுதியின் பாகமாக இருந்தது. இதன் தலைநகரம் தமஸ்குவாக இருந்திருக்கலாம். கி.மு. 520-லிருந்து கி.மு. 502 வரைக்கும் இந்தப் பகுதிக்கு தத்னாய் ஆளுநராக இருந்தார்.

யூதர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க தத்னாய் எருசலேமுக்கு வந்தார். கோரேசு ராஜாவின் அனுமதியோடுதான் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதாக யூதர்கள் சொல்லிக்கொள்கிறார்கள் என்று தத்னாய் தரியு ராஜாவிடம் சொன்னார். யூதர்கள் சொல்வது உண்மையென்று அரசுப் பதிவேடுகள் காட்டியது. (எஸ்றா 5:6, 7, 11-13; 6:1-3) அதனால், யூதர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தத்னாயுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. அதற்கு அவர் கீழ்ப்படிந்தார்.—எஸ்றா 6:6, 7, 13.

‘ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநரான தத்னாய்’ சரித்திரத்தில் ரொம்ப பிரபலமான ஒருவர் கிடையாது. இருந்தாலும் அவரைப் பற்றியும் அவருடைய பதவியைப் பற்றியும் பைபிள் மிகச் சரியாக சொல்கிறது. சரித்திரப்பூர்வமாக பைபிள் துல்லியமானது என்பதை நிரூபிக்க இந்தப் பதிவு இன்னொரு அத்தாட்சி.