Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | சண்டை சச்சரவு இல்லாத குடும்பம்...

எப்போதும் சந்தோஷமாக இருக்க...

எப்போதும் சந்தோஷமாக இருக்க...

பைபிளை படித்தால் சண்டை போடாமல், சமாதானமாக இருக்க முடியுமா? இந்தக் கட்டுரையில் சில பைபிள் வசனங்கள் இருக்கிறது. பைபிள் சொல்வதுபோல் நடந்துகொண்டதால் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சிலரிடம் கேட்கலாம். அதிலிருந்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வீர்கள்.

பைபிள் தரும் ஆலோசனைகள்

குறைகளை மட்டுமே பார்க்காதீர்கள்.

“தன்னலமும், வீண்பெருமையும் கொள்ள வேண்டாம். பணிவுடன் இருங்கள். நீங்கள் உங்களுக்குத் தரும் மரியாதையைவிட மற்றவர்களுக்கு அதிக மரியாதையைத் தாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்.”பிலிப்பியர் 2:3, 4, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“உங்க கணவனுக்காக/மனைவிக்காக எதை வேணாலும் விட்டுக்கொடுங்க. வேற யாரையும்விட அவங்கதான் முக்கியம்னு நினைங்க.”—கல்யாண வாழ்க்கையில் 19 வருடங்களைக் கடந்தவர்.

காதுகொடுத்து கேளுங்கள்.

‘யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் சண்டை போடக்கூடாது, நியாயமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும், எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்.’தீத்து 3:2.

“கோவப்படாம பேசினாலே பாதி பிரச்சினையை சரிபண்ணிடலாம். ‘அவங்க இதைதான் சொல்லப் போறாங்க’னு நீங்களே முடிவு பண்ணாதீங்க. அவங்க சொல்றதை நீங்க ஒத்துக்கலனாலும், என்ன சொல்றாங்கனு பொறுமையா கேளுங்க.”—கல்யாண வாழ்க்கையில் 20 வருடங்களைக் கடந்தவர்.

பொறுமையாக இருங்கள்.

‘பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்றிவிடும். அது அரசனையும் மாற்றும். மென்மையான பேச்சு மிகுந்த வலிமையானது.’ நீதிமொழிகள் 25:15, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“குடும்பம்னு இருந்தா ஆயிரம் பிரச்சினை வரும். ஆனா, நாம பொறுமையா நடந்துக்கிட்டா பிரச்சினை பெருசா வெடிக்காம பார்த்துக்கலாம்.”—கல்யாண வாழ்க்கையில் 27 வருடங்களைக் கடந்தவர்.

வாய்ச்சண்டையும் வேண்டாம், கைச்சண்டையும் வேண்டாம்.

“கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள்.”கொலோசெயர் 3:8, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“என் வீட்டுக்காரருக்கு கோவமே வராது, ஒருநாள்கூட அவர் என்னை திட்டினதில்லை.”—கல்யாண வாழ்க்கையில் 20 வருடங்களைக் கடந்தவர்.

சீக்கிரமாக மன்னிப்பு கேளுங்கள்.

“ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.”கொலோசெயர் 3:13.

“கோவம் வரும்போது நம்ம வாயை அடக்குறது கஷ்டம்தான், வாய்தவறி ஏதாவது சொல்லிட்டா அது மத்தவங்க மனசுக்கு கஷ்டமா இருக்கும். அந்த மாதிரி நேரத்தில ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு, மன்னிச்சு விட்டுடணும். மன்னிக்கிற மனசு இல்லனா கல்யாண வாழ்க்கை சந்தோஷமாவே இருக்காது.”—கல்யாண வாழ்க்கையில் 34 வருடங்களைக் கடந்தவர்.

கொடுப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

“கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். . . .  எதை வைத்து மற்றவர்களுக்கு அளந்து கொடுக்கிறீர்களோ, அதை வைத்து அவர்களும் உங்களுக்கு அளந்து கொடுப்பார்கள்.”லூக்கா 6:38.

“எனக்கே தெரியாம, எனக்கு என்னெல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சிக்கிட்டு திடீர்னு ஏதாவது வாங்கிட்டு வருவார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதைப் பார்த்து, நானும் அவருக்காக ஏதாவது செய்யணும்னு நினைப்பேன். கல்யாணம் ஆனதுல இருந்து இப்போ வரைக்கும் இதே மாதிரிதான் எப்பவும் நாங்க சந்தோஷமா இருக்கோம்.”—கல்யாண வாழ்க்கையில் 44 வருடங்களைக் கடந்தவர்.

குடும்பத்தில் சண்டை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

இவங்களை மாதிரி லட்சக்கணக்கான பேர் பைபிள் படித்ததால், சண்டை போடாமல் சமாதானமாக இருக்கிறார்கள். * வீட்டில் இருக்கிற மற்றவர்கள் பைபிள் சொல்வது போல நடந்துகொள்ளவில்லை என்றாலும், இவர்கள் விட்டுக்கொடுத்து, சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஏனென்றால், “சமாதானத்திற்காக வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 12:20, ஈஸி டு ரீட் வர்ஷன். ▪ (g15-E 12)

^ பாரா. 24 குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் இருக்கிற 14-வது பாடத்தைப் படியுங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.dan124.com வெப்சைட்டிலும் கிடைக்கும்.