Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 23

யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கு

யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கு

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் சீனாய் மலையின் அடிவாரத்துக்கு வந்து கூடாரம் போட்டு தங்கினார்கள். யெகோவா மோசேயைக் கூப்பிட்டதால் அவர் அந்த மலைக்கு ஏறிப் போனார். அப்போது யெகோவா அவரிடம், ‘நான் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினேன், அவர்கள் என் பேச்சைக் கேட்டு என் சட்டங்களின்படி நடந்தால், அவர்கள் எனக்கு விசேஷ மக்களாக இருப்பார்கள்’ என்று சொன்னார். மோசே கீழே போய் யெகோவா சொன்னதை இஸ்ரவேலர்களிடம் சொன்னார். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? ‘யெகோவா சொல்வதை எல்லாம் செய்வோம்’ என்றார்கள்.

மோசே மறுபடியும் மலைக்கு ஏறிப் போனார். யெகோவா அவரிடம், ‘இன்னும் மூன்று நாட்களில் நான் உன்னிடம் பேசுவேன். அதனால், சீனாய் மலைமேல் ஏறி வரக் கூடாது என்று மக்களிடம் சொல்லி வை’ என்றார். மோசே கீழே இறங்கிப் போய், யெகோவா சொல்வதைக் கேட்கத் தயாராக இருக்கும்படி மக்களிடம் சொன்னார்.

மூன்றாவது நாளில், அந்த மலைமேல் மின்னல் அடித்தது, கருமையான மேகம் சூழ்ந்தது. பயங்கரமான இடி சத்தமும் ஊதுகொம்பின் சத்தமும் கேட்டது. பிறகு, யெகோவா நெருப்போடு அந்த மலையில் இறங்கினார். இஸ்ரவேலர்கள் அதைப் பார்த்து பயந்து நடுங்கினார்கள். அந்த மலையே கிடுகிடுவென்று ஆடியது, சுற்றிலும் ஒரே புகையாக இருந்தது. ஊதுகொம்பின் சத்தம் அதிகமாகிக்கொண்டே போனது. அப்போது கடவுள், ‘நான் யெகோவா. என்னைத் தவிர வேறு கடவுள்களை நீங்கள் வணங்கக் கூடாது’ என்று சொன்னார்.

மோசே அந்த மலைக்கு ஏறிப் போனார். மக்கள் தன்னை எப்படி வணங்க வேண்டும், அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய சட்டங்களை யெகோவா அவரிடம் கொடுத்தார். மோசே அவற்றை எழுதிக்கொண்டார். பிறகு, இஸ்ரவேலர்களிடம் அவற்றை வாசித்துக் காட்டினார். அப்போது அவர்கள், ‘யெகோவா சொன்னதை எல்லாம் நாங்கள் செய்வோம்’ என்று வாக்குக் கொடுத்தார்கள். ஆனால் சொன்னபடி செய்வார்களா?

“உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.”—மத்தேயு 22:37