யோபு 7:1-21
7 பின்பு அவர்,
“அற்ப மனுஷனின் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்.அவன் வாழ்க்கை கூலியாட்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருக்கிறது.+
2 ஒரு அடிமையைப் போல அவன் நிழலுக்காக ஏங்குகிறான்.ஒரு கூலியாளைப் போலக் கூலிக்காகக் காத்திருக்கிறான்.+
3 எத்தனையோ மாதங்கள் எனக்கு வீணாகிவிட்டன.எத்தனையோ இரவுகள் கவலையிலேயே கரைந்துவிட்டன.+
4 ‘எப்போதுதான் விடியுமோ?’ என்று யோசித்துக்கொண்டே படுக்கிறேன்.+
ராத்திரி மெதுவாக நகருகிறது, விடியும்வரை தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுக்கிறேன்.
5 என் உடம்பெல்லாம் புழுவும் புழுதியுமாக இருக்கிறது.+புண்களிலிருந்து சீழ் வடிகிறது.+
6 என்னுடைய காலம் நெசவுத் தறியைவிட வேகமாக ஓடுகிறது.+எந்த நம்பிக்கையும் இல்லாமல் முடிவுக்கு வருகிறது.+
7 கடவுளே, என் வாழ்க்கை காற்றுபோல் பறந்துவிடும்தானே?+
இனி எங்கே எனக்குச் சந்தோஷம் கிடைக்கப்போகிறது?*
8 இப்போது என்னைப் பார்க்கிறவர்கள் இனிமேல் பார்க்க மாட்டார்கள்.நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் இருக்க மாட்டேன்.+
9 மேகம் கலைந்து மறைவது போல, கல்லறைக்குப் போகிறவன் மறைந்துபோகிறான்.அவன் திரும்பி வருவதில்லை.+
10 அவன் தன் வீட்டுக்குத் திரும்ப மாட்டான்.இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான்.+
11 அதனால், இப்போது நான் பேசாமல் இருக்க மாட்டேன்.
என் மனம் படுகிற பாட்டைச் சொல்லாமல் விட மாட்டேன்.என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன்.+
12 நீங்கள் எனக்குக் காவல் வைக்க நான் என்ன கடலா?அல்லது கடலில் இருக்கும் ராட்சதப் பிராணியா?
13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பினேன்.என் கட்டில் எனக்கு நிம்மதி தருமென்று எதிர்பார்த்தேன்.
14 ஆனால் கடவுளே, நான் படுத்திருக்கும்போது கனவுகளால் என்னைக் கதிகலங்க வைக்கிறீர்கள்.தரிசனங்களால் திகிலடைய வைக்கிறீர்கள்.
15 நான் மூச்சுத் திணறி செத்துப்போவதே மேல்.இந்த உடலோடு வாழ்வதைவிட உயிர்விடுவதே மேல்.+
16 எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது;+ உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை.
என்னை விட்டுவிடுங்கள், என் வாழ்நாள் வெறும் மூச்சுக்காற்றுதானே?+
17 நீங்கள் மதிக்கிற அளவுக்கு மனுஷன் ஒரு பெரிய ஆளே இல்லை.நீங்கள் அவனை அக்கறையோடு கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை.+
18 அப்படியிருந்தும், ஒவ்வொரு நாள் காலையிலும் அவனை ஏன் ஆராய்ந்து பார்க்கிறீர்கள்?ஒவ்வொரு நொடியும் அவனை ஏன் சோதித்துப் பார்க்கிறீர்கள்?+
19 எவ்வளவு காலம்தான் என்னையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள்?எச்சில் விழுங்கும் நேரத்துக்குக்கூட என்னைத் தனியாக விட மாட்டீர்களா?+
20 மனுஷனைக் கவனிக்கிறவரே,+ நான் பாவம் செய்திருந்தாலும் உங்களுக்கு எப்படிக் கெடுதல் செய்ய முடியும்?
ஏன் என்மீதே குறியாக இருக்கிறீர்கள்?
நான் உங்களுக்குப் பாரமாகிவிட்டேனா?
21 என் பாவத்தை ஏன் மன்னிக்காமல் இருக்கிறீர்கள்?என் குற்றத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?
சீக்கிரத்தில் நான் மண்ணோடு மண்ணாகிவிடுவேன்.+
நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் இருக்க மாட்டேன்” என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “நல்லது நடக்கப்போகிறது?”